அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, அன்பையும் கருணையையும் முன்னிறுத்தி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து எழுந்து நின்று, சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இந்த புத்தாண்டில் நம் அனைவருக்கும் வலிமை கிடைக்கட்டும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதன் மூலம் பிறக்கின்ற இந்தச் தமிழ் – சிங்களப் புத்தாண்டு, எமது இதயங்களை கடந்த காலத்தின் இனிய நினைவுகளாலும், எதிர்காலத்தைப் பற்றிய புதிய எதிர்பார்ப்புகளாலும் நிரப்புகின்ற ஒரு நிகழ்வாகும்.
குயிலின் ஓசையும், சித்திரை மாத மலர்கள் சூழவும் மலரும் இந்த வசந்த காலப் பண்டிகை என்பது, வெறும் சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்கும் அப்பால், எமது கலாசார அடையாளத்தையும் “எம்மைச் சார்ந்தவர்” என்ற உணர்வையும் உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு பெருமைமிக்க விழாவாகும்.
புத்தாண்டு என்பது உறவுகளின் அரவணைப்பை அனுபவிக்கின்ற மிக அழகானதொரு காலமாகும். கிராமத்து வீட்டிலிருந்து வீசும் பலகாரங்களின் மணமும், ஒரு வருடம் முழுவதும் காத்திருந்த உறவினர்களின் சந்திப்பும் எமக்குள்ளே விவரிக்க முடியாத ஒரு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகின்றன.
பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விலகி, சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் செலவிடும் இந்தத் தருணங்கள், ஒவ்வொருவருக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாக அமைகின்றது.
இந்தப் புத்தாண்டு பிறப்பின் ஊடாக ஒவ்வொரு இல்லத்திலும், இதயத்திலும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிலைத்திருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, அன்பையும் கருணையையும் முன்னிறுத்தி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து எழுந்து நின்று, சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இந்த புத்தாண்டில் நம் அனைவருக்கும் வலிமை கிடைக்கட்டும்!




