“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது தொடக்கம் மட்டுமே” : மத்திய கிழக்கு பதற்றத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நிலைப்பாடு

மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளது. “போர்நிறுத்தம் என்பது முடிவு அல்ல – அது ஒரு தொடக்கம் மட்டுமே” என ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின்  வெளியுறவு அமைச்சகத்தின் மாநில அமைச்சர் நூரா பின்த் முகமது அல் காபி (Noura bint Mohammed Al Kaabi) தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேரலை நிகழ்ச்சியொன்றி மேற்கண்டவாறு தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் நூரா பின்த் முகமது அல் காபி மேலும் கூறுகையில்,

ஈரான் போரின் பின்னணியில், சுமார் 6 வாரங்களுக்கு பிறகு உருவான போர்நிறுத்த சூழ்நிலையிலும், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தன்னுடைய முக்கிய கவனத்தை தூதரக முயற்சிகள் மற்றும் பதற்றக் குறைப்பில் செலுத்தி வருகிறது.

கடந்த 40 நாட்களுக்கு மேலாக, 3,000க்கும் அதிகமான ஏவுகணைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தை இலக்காகக் கொண்டதாகவும், இருந்தபோதிலும் நாடு இன்னும் திடத்தன்மை மற்றும் வலிமை கொண்ட நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இது நிலப்பரப்பைப் பற்றியது மட்டுமல்ல. ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இந்தப் போரில் நேரடியாக ஈடுபடவில்லை. இருந்தபோதும் தாக்குதல்களுக்கு உள்ளானது. இது ஒரு கருத்தை தாக்கும் முயற்சியாகும்,” என்றார்.

ஹோர்மூஸ் நீரிணை எந்த ஒரு நாட்டினாலும் கட்டுப்படுத்தப்பட முடியாது என்றும், அது உலகளாவிய வர்த்தகம், ஆற்றல், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான முக்கிய பாதை என்றும் அவர் வலியுறுத்தினார்.

“எங்கள் நிலைப்பாடு தெளிவானது பொறுப்புணர்வு, நிலைத்தன்மை மற்றும் உலக பொருளாதார அமைப்புகளை பாதுகாப்பது,” என தெரிவித்தார்.

நாட்டின் நிலப்பரப்பு மற்றும் மக்களை பாதுகாப்பது முதன்மை என கூறிய அவர், எதிர்காலத்தில் மாற்று வர்த்தக பாதைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

“இது ஒரு சோதனை நேரம். ஒரு நாடு இத்தகைய சூழ்நிலைகளில் எப்படி பதிலளிக்கிறது என்பதே அதன் அடையாளமாகும்,” என்றார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வலுவான உறவுகளை பேணிவருகிறது. செயற்கை நுண்ணறிவு, கல்வி மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் கூட்டாண்மை தொடர்கின்ற நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சீனாவுடனும் உறவுகள் விரிவடைகின்றன.

எதிர்காலத்தில், இந்த உறவுகள் மேலும் தெளிவான தளத்தில் தொடரும் என்றும், பாதுகாப்பு முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுக் காலத்திலிருந்து வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்த ஐக்கிய அரபு இராஜ்ஜியம், தற்போதைய நெருக்கடியிலும் அதையே தொடர்கிறது. தலைமையின் நேரடி தொடர்பு, தெளிவான தகவல் பரிமாற்றம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளது.

இந்த நெருக்கடியின்போது கூட மக்கள் நாட்டை விட்டு செல்லாமல் தொடர்ந்து வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளனர். இது நாட்டின் அமைப்பின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகும்.

“ஐக்கிய அரபு இராஜ்ஜயம் என்பது மக்கள் சார்ந்த நாடு. இங்கு வாழும் அனைவரும் எமிராத்தியர்களே,” என்ற கருத்து, இந்த நெருக்கடியின் போது வெளிப்பட்ட ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.

மொத்தத்தில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் தூதரகம், பாதுகாப்பு மற்றும் நீண்டகால அமைதி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை முன்னெடுத்து வருகிறது.