வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல் : கடும் சட்ட நடவடிக்கை உத்தரவு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தரப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகளுக்கு பதிலாக, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர,

புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினைச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினர் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட மற்றும் வெவ்வேறு வர்ணங்களிலான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய செயற்பாடுகள் குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த விவகாரத்தை உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு பொலிஸ் மா அதிபர், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதுடன், இவ்வாறு விதியை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.