சட்டத்தரணிகளிடம் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய காவல் துறை

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது, காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் நடத்திய அமைதியான போராட்டத்தைக் கலைத்து, பொலிஸார் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், அப்போதைய காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவர், பாதிக்கப்பட்ட சட்டத்தரணிகளிடம் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, காலி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார மற்றும் அமர திவாகர லியனகே ஆகிய இரு சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவானது நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த, அப்போதைய காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜி. வேதசிங்க, அப்போதைய காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

அங்கு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் அனைவரும் மனுதாரர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மனுதாரர்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரும் ஆவணத்தையும் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்த மன்னிப்பை மனுதாரர்கள் ஏற்றுக்கொள்வதாக, அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

இந்த இணக்கப்பாட்டைப் பதிவு செய்த பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிவாதியான பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன உரையாற்றுகையில்,

“அன்று நடந்த சட்டவிரோதமான செயல் குறித்தே இந்த மனுதாரர்களான சட்டத்தரணிகள் முறையிட்டிருந்தனர். அவர்கள் காலியிலிருந்து இந்த வழக்குக்காக இங்கு வந்துள்ளனர். இந்த வழக்கைத் தீர்த்துக்கொள்வதற்கு அவர்கள் முன்வந்திருப்பதை பாராட்டவேண்டும். இது போன்றதொரு சலுகை அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி பொருளாதார நெருக்கடிக்கு எதிராக காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் சுலோக அட்டைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இதன்போது, அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள், போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததுடன், போராட்டக்காரர்களின் சுலோக அட்டைகளையும் கிழித்தெறிந்ததாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

பொலிஸாரின் இந்தச் செயல் மூலம் பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.