தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும், 2019இல் தயாரிக்கப்பட்ட MOP உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.
இந்த உரம் பயன்பாட்டுக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் பின்னரே கூற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் – மகா கனதராவ பிரதேசத்தின் ரம்பேவ விவசாய சேவை அதிகார எல்லைக்குட்பட்ட பண்டுகாபயபுர விவசாயிகளுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டில் மானிய விலையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட உரத்தொகுதியே இவ்வாறு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்ட இந்த MOP உரம், 2019ஆம் ஆண்டு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மற்றும் காலாவதியான உரம் என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே கருத்து தெரிவிக்கையில்,
அனுராதபுரத்தில் விநியோகிக்கப்பட்ட உரம் தொடர்பாக, நாம் உடனடியாக உர செயலகத்தின் அனுராதபுர பிரதி பணிப்பாளர் ஊடாக உர மாதிரிகளைப் பெற்று கொழும்புக்கு அனுப்பியுள்ளோம். அந்த மாதிரிகளை மிக விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளோம். இந்த உர மாதிரி பரிசோதிக்கப்பட்ட பின்னரே எம்மால் இறுதி முடிவை அறிவிக்க முடியும் என்றார்.
எனினும், இது குறித்து உர நிறுவனத்திடம் வினவியபோது, இவை 2022ஆம் ஆண்டு கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் என அவர்கள் தெரிவித்தனர். 2022இல் இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு, நாம் ஏற்கனவே மாதிரிப் பரிசோதனை செய்து அனுமதி வழங்கியிருந்தோம். எது எப்படியாயினும், தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ள இந்த உரத்தையும் குறுகிய காலத்துக்குள் மாதிரிப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது என்ன நிலையில் உள்ளது என்பதை எம்மால் கூற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



