சாய்ந்தமருதில் அமைந்துள்ள கட்டடமொன்று 2004இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தால் சேதமாகியிருந்ததோடு, பின்னர், அக்கட்டடம், சமூக சீர்கேடுகளுக்கான இடமாகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்தது. எனினும், அந்தக் கட்டடத்தில் இடம்பெறக்கூடிய தகாத செயற்பாடுகள் தற்போது தடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (22) முதல் தற்போது வரை குறித்த கட்டத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அக்கட்டடத்தில் இரவு வேளைகளில் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது உரிய திணைக்களங்களின் நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை பொதுமக்கள் வரவேற்கும் வகையில் திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
“சுனாமி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது அளிக்கப்படும்” என்றொரு செய்தி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இச்செய்தியில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில், ஆயுள்வேத மத்திய மருந்தகம் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதுடன், அது, பாதுகாப்பற்ற கட்டடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
எனினும், தற்போது அந்தக் கட்டடத்தில் முன்னர் இடம்பெற்று வந்த சமூக சீர்கேட்டு செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதை அப்பிரதேச மக்கள் வரவேற்கின்றனர்.








