இந்தியக் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸின் ஏவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜப்பான் பிரதமர் சனேடகைச்சி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியன், ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் அந்தோணியோ கோஸ்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி டெல்லியில் இருந்து பிரான்ஸ் சென்றநிலையில் அங்கிருந்து ஸ்லோவேக்கியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பினார்.
பிரான்ஸின் ஏவியான் நகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஜி7 அமர்வுகளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஜி7 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் கைகுலுக்கி கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்து 5 நிமிடங்கள் பேசினர். கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவுக்கு சென்ற மோடி, அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால் இரு நாடுகள் இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு அதிபர் ட்ரம்பை அவர் நேற்றுமுன்தினம் மீண்டும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றது.
மாநாடு இறுதி நாள்
இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, பிரிட்டிஷ், கனடா, இத்தாலி பிரதமர்கள், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜயாத் அல் நயான் உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்புடனும் பிரதமர் மோடி தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். காலையில் தொடங்கிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மதிய உணவு இடைவேளையின்போது அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்தார்.





