சீனாவில் புயல், மண்சரிவில் சிக்கி 20 பேர் பலி ; 300க்கு மேற்பட்டோர் காயம்

சீனாவில் பலத்த புயல் மற்றும் மண்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததோடு 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெள்ளத்தில் மூழ்கிய பண்ணையொன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பண்ணையிலிருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் வெளிக்கிளம்பியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே  அச்சம் மற்றும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை, வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு அந்நாட்டின் பல பகுதிகளில் பெருமளவு உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லோங்னான் கிராமத்தில் நேற்று (7) அதிகாலை மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் மொத்தமாக வசித்த 33 பேர் மண்ணுக்குள் புதைந்துபோயுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக அங்கு மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டதில் முதற்கட்டமாக, இடிபாடுகளுக்குள் இருந்து 21 பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக, மண்ணுக்குள் புதையுண்ட, எஞ்சிய 12 பேரை மீட்க தற்போது தீவிரமாக மீட்புக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

அத்துடன் ஹூபெய் மாகாணத்தை தாக்கிய சூறாவளி, இடி, மின்னலில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

மேலும் சூறாவளியால் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

மற்றொரு பகுதியில் பெய்த பலத்தமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.