வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் ஹாங்ஃடாங் (Hongtong) மாவட்டத்தில் உள்ள ஹோயி (Haoyi) கிராமத்தில் வெள்ளிக்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளது.
மண்மேடு திடீரென சரிந்து விழுந்ததில், அங்கிருந்த ஒரு குடியிருப்பு வீடு முற்றிலும் புதையுண்டதுடன் வீட்டிற்குள் இருந்த 8 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் அந்நாட்டு பொலிஸார் , தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய 550-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
கிரேன்கள், லோடர்கள், ட்ரோன்கள் மற்றும் உயிர்களைக் கண்டறியும் கருவிகள் உட்பட 130-க்கும் மேற்பட்ட நவீன உபகரணங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதன்போது இடிபாடுகளில் சிக்கிய 8 பேரும் மீட்கப்பட்டனர். எனினும், அதில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்த எஞ்சிய 3 பேர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக அந்நாட்டு அவசரக்கால மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




