“நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” எனும் கருப்பொருளின் ஜூலை 27 முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நேர்மை வாரம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) திங்கட்கிழமை காலை ஆரம்பமானது.
இதனுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம் உட்பட அனைத்து அரச நிறுவனங்களிலும் ‘தேசிய நேர்மை உறுதிமொழி’ மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கான ஒழுக்க விதிகள் அடங்கிய ஆவணத்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரும் உள்ளக விவகாரப் பிரிவின் பிரதானியுமான சானகி ரணதுங்க , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
தேசிய நேர்மை வாரத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நேர்மை (Integrity) என்பதன் உண்மைப் பொருள் லஞ்சம் மற்றும் ஊழலற்ற தன்மையுடன் இருப்பது மட்டுமல்ல.யாருமே உங்களைக் கவனிக்காத நேரத்திலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சரியானதைச் செய்வதே ஆகும் எனக் குறிப்பிட்டார்.
அதன்படி, ஒரு அதிகாரி ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாத போதிலும், அவர் தனது கடமையைச் சரியாகச் செய்யாவிட்டால், அவரது நேர்மை பாதிக்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அரச அதிகாரிகளை ஊழல்வாதிகளாகவோ அல்லது நேர்மையற்றவர்களாகவோ கருதிச் செயல்படுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல எனக் கூறிய ஜனாதிபதியின் செயலாளர், அவர்களிடம் உள்ள நேர்மையையும் சரியானதைச் செய்வதற்கான விருப்பத்தையும் மேலும் வளர்ப்பதே இந்த “நேர்மை வாரத்தின்” முக்கிய நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டில் அரச சேவையின் தரம், செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதும், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதும் இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் சுய கண்காணிப்புடன் கூடிய, மனசாட்சிக்கு உட்பட்டு, வெளிப்படையான மற்றும் தார்மீகம் சார்ந்த அரச சேவையை நாட்டில் நிறுவுவதே இலக்காகும் என ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
லஞ்சம் மற்றும் ஊழலை நோக்கி சமூகம் நகரும் போது, அது தனிநபரின் நேர்மைக்கு பெரும் சவாலாக அமைகிறது. எனவே, அரச துறை மட்டுமல்லாது தனியார் துறை மற்றும் பொதுமக்களும் சட்டத்தை மதிக்கும், உயர் பண்புகளைக் கொண்டவர்களாக மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் காணப்படும் நற்பண்புகளை மேம்படுத்துவதும், நல்லியல்புகளை வளர்ப்பதும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். நேர்மை என்ற கோட்பாடும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையது என்று கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
எனினும், கடந்த காலங்களில் சமூகத்தில் இந்தக் கோட்பாட்டிற்கு உரிய பெறுமதியோ மதிப்பீடோ கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நோக்கம் சமூகத்தை இந்த பிற்போக்கான நிலையிலிருந்து மீட்பதே ஆகும் என வலியுறுத்தினார்.
அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சுமார் 350 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. அரச நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளை நேரடியாக இந்தப் பிரிவுகளுக்குத் தெரிவிக்க முடியும் என்பதோடு, இந்தப் பிரிவுகளின் செயற்பாடுகளை இணையவழி கட்டமைப்பின் மூலம் கண்காணிப்பதற்கான பொறிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சமூகம் மாறும் வரை காத்திருக்காமல், அரச கட்டமைப்பிற்குள் புதிய பொறிமுறைகளை அறிமுகப்படுத்தி, மக்கள் நேர்மையான பாதையில் செல்வதற்கான வழியை அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மிக நேர்மையுடைய அரச சேவையையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட முழு அரச சேவையின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா செயலகம்) எஸ். பி. சி. சுகீஷ்வர, ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.











