சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், இலங்கையுடனான அமெரிக்காவின் பங்காண்மையினை பலப்படுத்துவதற்காகவும், நேற்று 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, அமெரிக்க காங்கிரஸின் தூதுக்குழுவொன்று காங்கிரஸின் உறுப்பினரான கிரிஸி ஹூலஹேன் (Chrissy Houlahan) (D-PA) தலைமையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்கிறது.
முன்னாள் விமானப்படை வீராங்கனையான ஹூலஹேன் பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினராகவும், அதன் இராணுவப் பணியாளர்கள் மீதான துணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினராகவும் மற்றும் சபையின் புலனாய்வு தொடர்பான நிரந்தரத் தேர்வுக் குழுவின் ஒரு உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல்வேறுபட்ட இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர, பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உட்பட்ட, அரச, இராணுவ மற்றும் உள்ளூர் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளையும் இத்தூதுக்குழுவினர் மேற்கொள்வர்.
நாடு கடந்த குற்றங்களைத் தடுத்தல், வர்த்தக உறவுகளையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஆழப்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மையினையும், பாதுகாப்பு ஒத்துழைப்பினையும் மேம்படுத்துதல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளைக் கையாளும் வகையிலான, ஒரு மிகவும் வலுவான இருதரப்பு உறவுகளை இலங்கையுடன் பேணுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை பிரதிநிதி ஹூலஹேனின் விஜயம் பிரதிபலிக்கிறது.





