உரிய நேரத்தில் துப்பாக்கி இயங்காததால் தோல்வியில் முடிந்தது கொலைத் திட்டம்!

கல்கிஸை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி வீட்டில் தனிமையில்  இருந்த நபர் ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்துவதுக்காக, சந்தேகநபர்கள் இருவர் சென்றிருந்த நிலையில், குறித்த துப்பாக்கி இயங்காமையால் துப்பாக்கிச் சூடு தோல்வியில் முடிந்த சம்பவத்தில்,  சந்தேகநபர்களுக்கு துப்பாகியைக் கொடுத்ததாகக் தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பல் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 21  ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் வீட்டொன்றின் மேல் மாடியில் உரிமையாளர் மாத்திரம் தனியாக இருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் “நீர் சாமிந்த தானே? எனக் கேட்டு அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர்.

கைத்துப்பாக்கியைப் போன்ற ஆயுதத்தினால் சுடுவதற்கு முற்பட்ட போதிலும், கோளாறு காரணமாக குறித்த துப்பாக்கி இயங்காத நிலையில், துப்பாக்கிதாரிகள் இருவரும் வீட்டிற்குள் புகுந்து குறித்த நபரை காலால் உதைத்துள்ளதுடன், அங்கிருந்த நாற்காலியால் தாக்கியுள்ளனர்.

இதில் வீட்டு உரிமையாளரின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது.  மேற்படி சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மற்றும் மேல் மாகாண (தெற்கு) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த பெண்னே  துப்பாக்கிச் சூட்டுக்கான துப்பாக்கியை கொடுத்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது  நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர்களுக்கு  அப்பெண் ஆயுதத்தை வழங்கும் காட்சியும் அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.