தேரர் வேடத்தில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு சென்ற பாடசாலை மாணவன் கைது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு தேரர் வேடத்தில் சென்றதாக கூறப்படும் பாடசாலை மாணவன் ஒருவன் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு செல்லும் தேரர்களுக்காக பல விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேரர் வேடத்தில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் தேரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் செல்லாமல் வேறு வழியாக  ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸார் தேரர்  வேடத்தில் இருந்த பாடசாலை மாணவனை பிடித்து விசாரித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், தேரர் வேடத்தில் இருப்பது 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவன் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான பாடசாலை மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.