இனி வரும் காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் அழைக்கப்படலாம்!

இனி வரும் காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் அழைக்கப்படலாம் என ஜனநாயக தமிழரசுக்கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தின அனுஷ்டிப்பு நேற்று(27.04.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வாவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு பல தமிழ் தரப்பினர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டுள்ளதுடன், சமஸ்டி தொடர்பில் உரையாற்றியுள்ளார்.

இவர் அரசுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாத்தைகளில் அதிகம் கலந்துகொண்ட ஒருவர். ஆனால் அத்தனை பேச்சுவார்த்தையையும் வெற்றிகரமாக முடிறியடித்தவரும் இவர் தான்.

அத்துடன், ஒரு காலத்தில் இவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க போகும் போது சிலவற்றை அனுசரித்து போகலாம் என்று கூறியிருந்த நிலையில், அவ்வாறு செல்லக் கூடாது என்று கூறி விட்டக்கொடுப்பில்லாது சமாதான பேச்சுக்களை குழப்பியவராவும் பார்க்கப்படுகிறார். இவ்வாறு இருக்கையில், ஜீ.எல்.பீரிஸ் நிலையில்லாத அரசியல்வாதியாகவே பார்க்கப்படுகிறார்.

இவர் தற்போது சமஸ்டி ஆட்சிக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையாகவே உள்ளது. 30 வருடமாக தனது கொள்கையில் மாறாது நிற்கும் ஒருவரை கொண்டுவந்து நீங்கள் வகுப்பெடுங்கள்.

உங்களுக்கு வகுப்பெடுக்க அவரே சிறந்த தெரிவு ஏனென்றால் நீங்கள் தேசியத்தை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்தளவுக்கு கொள்கையற்று வீணாக்கி விட்டீர்கள் என்றார்.