வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு யாழ்.வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதைத் தடுக்கும் வகையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தற்காலிகத் தடை உத்தரவு இன்று புதன்கிழமை (05.08.2026) நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம்- 22 ஆம் திகதி வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்றுச் செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் மேலும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க 14 நாட்கள் காலம் கோரப்பட்டது. எனினும், 106 சட்டப் பிரிவின் கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற அடிப்படையில் இன்றைய தினம் வரை உரிய எதிராளிக்கு எதிரான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும், எந்த விதமான போதுமான ஆதாரங்களோ, ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.





