பெண்ணின் படுகொலை – யாழில் சிக்கிய பிரதான சூத்திரதாரி

கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வைத்தியரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒருவார காலமாக தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரும் அவரது மனைவியும் நேற்று வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்து மூலம் பயணிப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என நுவரெலியா பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - யாழில் சிக்கிய பிரதான சூத்திரதாரி | Suspect In Teldeniya Murder Case Arrested

கடந்த 17ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காரொன்றில் பெண்ணின் சடலம் மீட்டகப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகம, பலல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் அம்பாறையிலுள்ள வைத்தியசாலையொன்றில் வைத்தியராக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த பணியில் இருந்து விலகியிருந்தவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பெண், தனது காதலன் எனக் கூறப்படும் சந்தேக நபருடன் கடந்த 16ஆம் திகதி நுவரெலியா பகுதியிலுள்ள தங்குமிடம் ஒன்றிற்கு வந்துள்ளார்.

அன்றைய தினமே இரவில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு சடலத்தை காரில் ஏற்றிய காதலன், மறுநாள் காலை தெல்தெனிய பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - யாழில் சிக்கிய பிரதான சூத்திரதாரி | Suspect In Teldeniya Murder Case Arrested

அதன் பின்னர், சந்தேக நபரான காதலனே தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த மரணம் குறித்துத் தகவல் வழங்கியுள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும், பலரை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.