பேருந்து கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே அறிவிக்கவும் – போக்குவரத்து ஆணைக்குழு

நியமிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்கள் அனைவரிடமும் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

நியமிக்கப்பட்ட கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் குறித்து உடனடியாக 1955 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முறையான அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் இத்தகைய சட்டவிரோத கட்டண வசூல் அதிகம் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்க முயன்ற 7 பஸ்கள் நேற்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, அதிக கட்டண வசூல்கள் இடம்பெற்றால் உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.