பரந்தூர் 2-வது விமான நிலைய திட்டம் சாத்தியமற்றது என்ற அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்துக்கு, தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: முந்தைய திமுக அரசு தான், சென்னையின் 2-வது விமான நிலையத்துக்கு பரந்தூரை தேர்வு செய்ததோடு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விமான நிலைய திட்டத்துக்காக கையகப்படுத்தி முன்னெடுத்தது.
தமிழக அரசு தான் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொருத்தமான இடம் என்பதற்கான விரிவான முன்சாத்திய ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
இதில், 4040 மீ x 45 மீ அளவிலான இரட்டை ஓடுதளங்களுக்கு சென்னை விமான நிலைய போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், அதன் திசையமைவு உட்பட அனைத்தையும் உறுதி செய்து ஆவணங்களை வழங்கியது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2024 ஜூலையில், இடத்துக்கான அனுமதியையும், 2025-ல் கொள்கை அளவிலான திட்ட அனுமதியையும் வழங்கியது.
இந்திய விமான நிலைய ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இது நடைபெற்றது.
இந்நிலையில், இப்போது அமைச்சர் நிர்மல் குமார் அந்த ஓடுதளத்தை சாத்தியமற்றது என்று திடீரென சொல்வது தொழில்நுட்பப் பிரச்சினையால் அல்ல.
தங்கள் தலைவரின் சுய விருப்பத்தால், மலிவான ஓட்டு வங்கி அரசியலால் தான். இது மாநில வளர்ச்சியை விட தவெக-வின் வளர்ச்சி தான் முக்கியம் என்ற அவர்களின் மாநில வளர்ச்சிக்கெதிரான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இது சென்னையின் விமானப் போக்குவரத்து நெரிசலை பல ஆண்டுகளுக்கு நீடிக்க வைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





