மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரித்தானியா அரசாங்கம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
டியாகோ கார்சியா இராணுவத் தளம் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் வழங்குவதற்கு பிரித்தானியா கடந்த ஆண்டு இணக்கம் தெரிவித்திருந்தது. இதற்கான சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டாம் என பிரித்தானியா தீர்மானம் செய்துள்ளதாக ‘த டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஒரு “பெரிய தவறு” என பெப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் முறையான அனுமதி இன்றி இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியாது என்பதால், வொஷிங்டனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரதமர் கீர் ஸ்டார்மரின் அலுவலகம் ஈடுபட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளத்தின் கட்டுப்பாட்டை பிரித்தானியா 99 ஆண்டுகளுக்குத் தன்வசம் வைத்திருக்கும்.
டியாகோ கார்சியா தளத்தின் நீண்டகால பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதே தங்களின் முன்னுரிமை என பிரித்தானிய அரசாங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“இந்த ஒப்பந்தமே தளத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கச் சிறந்த வழி என நாங்கள் நம்புகிறோம். எனினும், அமெரிக்காவின் ஆதரவு இருந்தால் மட்டுமே நாங்கள் இதனைத் தொடர்வோம்,” என பிரித்தானியா விளக்கமளித்துள்ளது.
1960 மற்றும் 70-களின் பிற்பகுதியில் டியாகோ கார்சியா தீவில் இராணுவத் தளத்தை அமைப்பதற்காக, அங்கிருந்த சுமார் 2,000 சாகோஸ் பூர்வீகக் குடிகளை பிரித்தானியா வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த நில உரிமைப் போராட்டத்தில், தற்போது அமெரிக்காவின் அரசியல் மாற்றம் புதிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.




