ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் மிகக் கடுமையான போர்ச் சூழலை நோக்கி நகர்ந்துள்ளது. ஜோர்தான், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை பிரகடனப்படுத்தியுள்ளது. அதேநேரம், ஈரானின் ஏவுகணைகளைத் தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
ஈரானிய வான்வெளிப் பாதுகாப்புப் படையினர் தங்களது முதற்கட்டப் பழிவாங்கும் நடவடிக்கையாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்காவின் ‘பிரின்ஸ் ஹஸன்’ விமானத் தளத்தின் மீது பல பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அமெரிக்காவின் அதிநவீன எம்கியூ-9 ட்ரோன் நிறுத்துமிடங்கள் மற்றும் கட்டளைத் தலைமையகம் முற்றாக அழிக்கப்பட்டதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஆயுதக் கிடங்கு மற்றும் ரேடார் தளம் ஆகியவற்றைக் குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் பிரதான தளமான ‘அல் உதைத்’ தளத்தை நோக்கி இரண்டாம் கட்டமாகப் பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, அங்கிருந்த போர் விமானப் பராமரிப்பு மையம் மற்றும் கட்டளைத் தலைமையகத்தை ஈரான் தாக்கியுள்ளது.
ஓமானின் துகம் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் தளவாட ஆதரவு மையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் தளங்கள் மீது ஈரானியப் படை “கனரக மற்றும் எதிர்பாராத” தாக்குதலை நடத்தி அவற்றை அழித்துள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ ஐஆர்ஐபி ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் இரண்டாவது வணிகக் கப்பல் ஒன்றும் ஈரானியப் படைகளால் தாக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக வான்பரப்புக்குள் ஊடுருவ முயன்ற ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கேட்ட வெடிப்புச் சத்தங்கள் இந்த இடைமறிப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டவையே எனவும் கூறப்பட்டுள்ளது.
கத்தார் பாதுகாப்பு அமைச்சு தங்களை நோக்கி வந்த ஏவுகணைத் தாக்குதலைத் தங்களது ஆயுதப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும், தற்பொழுது அச்சுறுத்தல் நீக்கப்பட்டு நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் ஜன்னல்கள் மற்றும் திறந்தவெளிகளை விடுத்து வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு கத்தார் உள்நாட்டு அமைச்சு அவசர எச்சரிக்கை விடுத்திருந்தது.
குவைத் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் பிரிவு, தங்கள் வான்வெளியில் ஊடுருவிய பகைமைப் பொருட்களை வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பஹ்ரைனில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இரண்டாவது முறையாகப் போர் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் பதற்றமடையாமல் உடனடியாகத் தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சு அவசர உத்தேசத்தை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் சில வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் சட்டவிரோதப் பாதையில் பயணிக்க முயன்றதாகவும், அதற்குத் தங்களது கடற்படை தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் ஈரான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக அமெரிக்க இராணுவம் ஈரானின் தெற்குக் கடற்கரை தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலாகவே அமெரிக்கத் தளங்கள் மீது தற்பொழுது ஏவுகணைகளை ஏவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரானியப் புரட்சிகரக் காவல் படை, “அமெரிக்காவின் துரோகத்தனமான ஆட்சி தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் இன்னும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சூழலில், தெற்கு ஈரான் முழுவதிலும் உள்ள ரேடார் மற்றும் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்கா தனது மூன்றாவது சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





