ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: உக்ரைனில் ஏவுகணைத் தட்டுப்பாடு!

ரஷ்யாவினால் ஏவப்படும் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும், அவற்றை வான்பரப்பில் வைத்து அழிப்பதற்கும் தேவையான ஏவுகணைகளுக்கு உக்ரைனில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைத் தட்டுப்பாடு காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவினால் உக்ரைன் மீது ஏவப்பட்ட 23 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் இராணுவத்தால் அழிக்க முடியாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீதான தனது தாக்குதல்களை ரஷ்யா தற்போது கணிசமான அளவு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் சுமார் 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் உக்ரைனை இலக்கு வைத்து 68 ஏவுகணைகளையும், 351 உளவு மற்றும் தாக்குதல் ட்ரோன் விமானங்களையும் ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவிகள் தாமதமாகி வரும் பின்னணியில், உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடைந்து வருவதை இந்தச் சம்பவம் காட்டுவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்