அமைதிக்கான நடைப்பயணம் கண்டி நோக்கி ஆரம்பமானது

உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட “ஏகிபசிகோ அமைதி நடைபயணம்” இன்று வியாழக்கிழமை  (23) அதன் இரண்டாவது நாளை எட்டியுள்ளது.

நேற்று புதன்கிழமை (22) தம்புள்ளை புனித நகரில் கோலாகலமாக ஆரம்பமாகிய  இந்த ஆன்மீகப் பயணம், இன்றையதினம் காலை மாத்தளை – வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிகாரை விகாரையிலிருந்து ஆரம்பமாகியது. இன்று மாலைக்குள் இந்தப் பேரணி கண்டியில் உள்ள புனித தலாதா மாளிகையை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரோ தலைமையிலான பிக்குகள் குழுவினர் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பேரணியில் ஜய ஸ்ரீ மஹா போதி கிளையிலிருந்து பெறப்பட்ட புனித போதி மரக்கன்று எடுத்துச் செல்லப்படுகிறது. இது ஒற்றுமை மற்றும் கருணையின் அடையாளமாக நகரங்கள் தோறும் கொண்டு செல்லப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறும் இந்த அமைதி நடைபயணம் வரும் ஏப்ரல் 28-ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

பிக்குகளுடன் ‘ஆலோகா’ என்ற பெயருடைய நாய் ஒன்றும் இந்த நடைபயணத்தில் இணைந்து செல்கின்றமை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.