இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு: இந்த ஆண்டில் இதுவரை 360 சம்பவங்கள் பதிவு

நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 360 இணையம் சார்ந்த நிதி மோசடிச் சம்பவங்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தகவல் வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், நாடெங்கிலும் உள்ள இணையப் பயனாளர்களை இலக்கு வைத்து இந்த அதிநவீன இணையத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின்  பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல இக்குற்றங்கள் குறித்த புள்ளிகளை வெளியிட்டுள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள மொத்த மோசடிச் சம்பவங்களில் 14 வழக்குகள் நேரடியாகச் சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது சிறுவர்கள் அதிகளவில் இணையவழி மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருவதைக் காட்டுகிறது.

உள்நாட்டில் பயனர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் சமூக ஊடக அடிப்படையிலான இணையத் தாக்குதல்களின் வளர்ந்து வரும் போக்கைக் காட்டும் வகையில், இதுவரை 40 வட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகப் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இணையவழி நிதிப் பரிமாற்றங்களின் போது பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இணைய தளங்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏதேனும் இணையதளங்கள் அல்லது லிங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர், அவை உண்மை தன்மையுடையதா என்பதைத் தீர ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

போலி இணையப் பக்கங்களில் தங்களின் தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதையோ அல்லது ஒன்லைன் பணச் செலுத்தல்களை மேற்கொள்வதையோ முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் டிஜிட்டல் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துமாறும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் பாதுகாப்புப் பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.