சீரற்ற வானிலை; மலையகத்தில் மண்சரிவு, வீடுகளுக்குள் வெள்ளநீர்

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேச செயலக நிர்வாக பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை லொக்ஹில்,  ஹரின்டன் A மற்றும் B கொலணிகளில் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் ஒன்று கொடுத்து வருகின்றனர்.

குறித்த கிராமங்களில் உள்ள வீடுகளை சுற்றி வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

அத்தோடு, லிந்துலை நோனா தோட்டம் பகுதியில் வீடு ஒன்றின் மீது மற்றுமொரு வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சமையல் பொருட்களும் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மேலும், கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட தவலதென்னை  பூண்டுலோயா பிரதான வீதி நியாகந்த பகுதியில் பாரிய மண்மேடு சரிந்ததால் அவ் வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கொத்தமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை ரஹன்வத்த பிரதான வீதி மண்மேடு சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் இவ்வீதியில் சரிந்துள்ள மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.