இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இசபெலா மார்டின் மற்றும் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று சனிக்கிழமை (02) நண்பகல் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துத் தூதுவருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களான இந்திரன் ரூபசாந்தன் (நாவிதன்வெளி), சுப்பிரமணியம் பாஸ்கரன் (காரைதீவு) மற்றும் தர்மதாஸ ஆரியதாஸ (ஆலையடிவேம்பு) ஆகியோரும் பங்கேற்றுத் தூதுவருடன் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் போது பிரதேச சபை தவிசாளர்கள், தூதுவரிடம் பிரதேச மக்களின் குறைபாடுகளை தூதுவர் இசபெலா மார்டின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள் .
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தமது பிரதேசங்கள் அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், திட்டமிட்ட ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இப்பிரதேச இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
உலகப் பொருளாதாரப் போக்குகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த கனேடிய அரசு போதிய உதவிகளை வழங்க வேண்டும் என தவிசாளர்கள் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.
பிரதேச மக்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் பொருளாதார ரீதியிலான பின்னடைவுகளைக் கேட்டறிந்த கனேடியத் தூதுவர், இக்கோரிக்கைகள் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தற்போதைய களநிலைவரங்களை நேரடியாகக் கேட்டறிந்த இந்தச் சந்திப்பு, இப்பிரதேசங்களின் எதிர்கால மேம்பாட்டிற்கு மிக முக்கியமானது எனப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.








