தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. எனினும், ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
பின்னர் அந்தக் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைத்தது. இதற்கிடையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை ஒருங்கிணைத்துத் தனி அணி ஒன்றை உருவாக்கினார்.
தவெக அரசுக்கு ஆதரவளித்து அதன் மூலம் அமைச்சர் பதவியைப் பெறுவதே அவரது திட்டமாக இருந்தது. இத்திட்டத்துக்கு வசதியாக, தான் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால், தவெக.வில் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
சி.வி.சண்முகத்தின் ராஜினாமாவால் காலியாக இருக்கும் அந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய சட்டப்பேரவையில் தவெக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், அக்கட்சி ஆதரவு தரும் வேட்பாளரே எளிதில் வெற்றி பெற முடியும். எனினும், இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தவெக தரப்பில் வேட்பாளர் எவரும் அறிவிக்கப்படவில்லை. தவெக சார்பிலேயே வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக மாநிலங்களவையில் கணக்கு தொடங்கும் என்று செய்திகள் வெளியாயின. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய சிலரில் ஒருவருக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின.
அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளில் ஒருவருக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. இதனால், யார் வேட்பாளர் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்தச் சூழலில், தமிழக முதல்வர் விஜய்யை நேற்று முன்தினம் நேரில் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலங்களவை சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தேசியத் தலைமையில் இருந்தும் இதுதொடர்பாக முதல்வரிடம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.




