ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய, சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடகிழக்கில் தேவையற்ற யுத்தம் உருவானதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.
இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நமது நாட்டின் அரசியல் உலகை உற்றுநோக்கினால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எந்தவொரு தவறான செயலையும் செய்யத் துணியும் நிலையையே காண முடிகின்றது. நாம் செய்யும் செயல் சரியானதா தவறானதா, சட்டப்பூர்வமானதா அல்லது பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று எவருமே சிந்திப்பதில்லை. தற்போதைய சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை இந்த அரசியல் குறுக்கு வழிகளாகும்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒரு தேர்தலை நடத்தி புதியதொரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதற்கு அடுத்த நாள் முதலே இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாம் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்ற குறுகிய அரசியல் வியாபாரமே இங்கு ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள், எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக்கட்டியெழுப்புவோம் என்று எவரும் சிந்திப்பதில்லை. எப்போதும் மற்றவர்களின் கால்களை இழுத்து வீழ்த்தவே பார்க்கின்றனர். இதுவே அதிகாரத்தைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற எவ்வித இன, மதப் பாகுபாடுகளும் இன்றி அனைத்து மக்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்தே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் நாட்டைச் சரியான பாதையில் முன்னோக்கிக் கொண்டு சென்றன.
எனினும், 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய மற்றும் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினால் இந்த நாடு முற்றாக வீழ்ச்சியடைந்தது. வடகிழக்கில் ஏற்பட்ட யுத்தமும் இத்தகையதொரு தேவையற்ற அரசியல் சுயநலத்தால் உருவானதே ஆகும்.
எமது நாட்டின் 75 அரசியல் ஆண்டுகாலப் பேரழிவுக்குப் பின்னால் இருப்பது இந்த அரசியல் குறுக்கு வழிகளேயாகும். அத்தகைய குறுக்கு வழிகளைத் தேடி நமது நாட்டுத் தலைவர்கள் எந்தவொரு கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிந்தனர். இத்தகைய குறுக்கு வழிகள் மூலம் இலங்கையை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது. நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அர்ப்பணிப்பு அவசியமாகும்.
நீதியும் நேர்மையும் என்பது அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போல சுலபமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல் அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தவறான செயல்களைச் செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மனச்சாட்சிக்கு இணங்க வேலை செய்யப் பழக வேண்டும். எனவே, வாழ்க்கையிலோ அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதிலோ குறுக்கு வழிகள் என்று எதுவுமே கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார்.



