செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு கட்டுப்பாடு அவசியம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, உலக நாடுகள் அதனை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் அது தவறான தகவல்களைப் பரப்பி, உலகை முடிவற்ற மகா யுத்தத்திற்குள் தள்ளும் எனவும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான பாப்பரசர் 14 ஆம் லியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாப்பரசரான லியோ, வத்திக்கானில் திங்கட்கிழமை வெளியிட்ட தனது முதலாவது பிரதான போதனை ஆவணமான ‘மக்னிஃபிகா ஹியுமனிடாஸ்’ (Magnifica Humanitas – மகத்தான மனிதநேயம்) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் 1.4 பில்லியன் உலகளாவிய உறுப்பினர்களுக்கான உயர்மட்ட போதனையாகக் கருதப்படும் இந்த ஆவணம், சுமார் 43,000 வார்த்தைகளைக் கொண்டு, கடந்த ஓராண்டு கால உழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானில் நடைபெற்ற இந்த ஆவண வெளியீட்டு விழாவில், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic – கிளவுட் AI தயாரிப்பாளர்கள்) நிறுவனத்தின் இணை நிறுவனர் கிறிஸ் ஓலா கலந்துகொண்டார்.

இவ்விழாவில் உரையாற்றிய பாப்பரசர் லியோ,

சில தன்னாட்சி ஆயுத அமைப்புகள்  தற்போதே மனிதக் கட்டுப்பாட்டையும் தாண்டி வளர்ந்துவிட்டதாக ஆழ்ந்த கவலை வெளியிட்டார். அத்துடன், உயிர்களைப் பறிக்கும் எந்தவொரு இறுதி இராணுவத் தீர்மானங்களையும் ‘செயற்கை நுண்ணறிவு’ அமைப்புகளிடம் ஒப்படைப்பது எவ்வகையிலும் அனுமதிக்க முடியாத ஒன்று எனவும் அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீதான போரைத் தீவிரமாக ஆதரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை அண்மைக்காலமாக பாப்பரசர் லியோ கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது நிர்வாகத்தின் கோபத்திற்கு பாப்பரசர் ஆளாகியுள்ளார்.

ஐந்தாம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்கத் திருச்சபையினால் போர்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘நியாயமான போர்’ என்ற பாரம்பரியக் கோட்பாட்டை இச்சுற்றறிக்கை மூலம் பாப்பரசர் லியோ நிராகரித்துள்ளார்.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உட்பட ட்ரம்ப் நிர்வாகத்தினர் ஈரானுடனான போரை நியாயப்படுத்த இக்கோட்பாட்டையே பயன்படுத்தி வருகின்றனர். “எந்தவொரு போரையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ‘நியாயமான போர்’ கோட்பாடு இப்போது காலாவதியாகிவிட்டது” என பாப்பரசர் லியோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மேலும், சில உலகத் தலைவர்கள் தங்களது உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே போர்களைத் தொடங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொழில்துறை புரட்சியின் போது தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தனது முன்னோடி பாப்பரசர் 13 ஆம் லியோவின் போதனைகளை நினைவு கூர்ந்த பாப்பரசர் 14 ஆம் லியோ, தற்கால தொழில்நுட்ப உலகில் உருவாகியுள்ள புதிய வடிவ கடுமையாகச் சாடியுள்ளார்

கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான அரிய பூமித் தனிமங்களை  அகழ்வதற்காக, உலகின் சில பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் அபாயகரமான சுரங்கங்களில் கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.

“தொழில்நுட்ப ஓட்டம் தடையின்றித் தொடர்வதற்காக இந்த ஏழை மக்களின் உடல்கள் காயங்களுக்கும் சிதைவுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இது நம் காலத்தின் மனச்சாட்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்” என பாப்பரசர் உருகமுடன் தெரிவித்துள்ளார்.