நாட்டின் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 18 வீதத்தால் அதிகரித்துள்ள தீர்மானமானது, நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாடகமென மின்சாரப் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல குற்றம் சாட்டியுள்ளார்.
மின்சார நுகர்வோர் சங்கத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடாக மின்சாரப் பாவனையாளர்களுக்கு, குறிப்பாக 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பாரிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் உயர்த்தியுள்ளனர். இதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைக்கும் காரணங்கள் மிகவும் விந்தையானவை.
காலநிலை மாற்றம் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், அதிகரித்த வெப்பம் காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர் வாய் திறக்கவில்லை.
தற்போது மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதற்கு உண்மையான காரணம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையாகும். இதனால் மின் உற்பத்தி நிலையங்கள் முறையாக இயங்கவில்லை. அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே அதிக விலைக்கு அனல் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நீர் மின் உற்பத்தி குறையும் போது, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாகவே அந்த இடைவெளி நிரப்பப்பட்டது. ஆனால் இன்று நிலக்கரி மின் உற்பத்தி நிலையமே நாட்டில் இல்லை என்ற ரீதியில் தலைவர் பேசுகிறார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பல பில்லியன் கணக்கான ஊழல்களை மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகிறார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களின் பக்கம் நிற்காமல், ஊழல்வாதிகளின் பக்கமே நிற்கின்றார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
அத்தோடு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அடுத்த தவணைக்கான கடனைப் பெற்றுக்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தத் திடீர் கட்டண உயர்வை மேற்கொண்டுள்ளது. இதற்காக நாட்டு மக்களைப் பட்டினி போடச் சொன்னாலும் இந்த அரசாங்கம் அதைச் செய்யும். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக டீசல் பீப்பாய் ஒன்றினை 286 டொலர்களுக்குக் கொள்வனவு செய்த பெருமையும் இவர்களையே சாரும். இவ்வளவு அதிக விலைக்கு எரிபொருளைக் கொண்டு வந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தால் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த நஷ்டத்தைத் தற்காலிகத் தரவுகளைக் காட்டி அப்பாவி மக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம்?
இந்தக் கட்டண உயர்வு சாதாரண மக்களை மாத்திரமன்றி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் முயற்சியாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும். 186 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சிறிய கடைகள் முதல் தொழிற்சாலைகள் வரை உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதன் விளைவாகப் பொருட்களின் விலைகள் உயரும், இறுதியில் அந்தப் சுமையையும் நுகர்வோரே சுமக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்கு முன்னதாக மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கட்டணத்தை பல மடங்காக அதிகரித்துள்ளனர். ஜனாதிபதியின் வாக்குறுதிகள் இன்று வெற்றுப் பேச்சுகளாக மாறியுள்ளன.
கடந்த முறை மின்கட்டணத்தை உயர்த்தும் போது, இலங்கை மின்சார சபையின் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு ஊதியம் வழங்கப்படுமெனக் கூறப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த ஊழியர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களின் உழைப்பிற்கான பலனைப் பெற முடியாமல் இன்றும் தவிக்கின்றனர். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கண்களைக் கட்டிக்கொண்டு அரசாங்கத்தின் தேவையை மாத்திரமே நிறைவேற்றுகிறது. இந்தத் தன்னிச்சையான மின்சாரக் கட்டண உயர்வை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த முறையற்ற தீர்மானங்களால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி முற்றாக அழிந்து, அனைத்துப் பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலைக்கு நாடு தள்ளப்படும் என்றார்.



