மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.டி.தாஹிஸ் இன்று திங்கட்கிழமை (3) நடைபெற்ற விசேட கூட்டத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A.T.M. ராபி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் எஸ். பிரகலாதன் புதிய தவிசாளரின் பெயரை முன்மொழிய, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ராஜரூபன் வழிமொழிந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையே எட்டப்பட்ட ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முன்னாள் தவிசாளர் எஸ். பிரகலாதன் பதவி விலகியதைத் தொடர்ந்து M.T.தாஹிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தவிசாளர் பதவிக்கு வேறு எவரும் முன்மொழியப்படாததால், M.T. தாஹிஸ் போட்டியின்றி தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
சுயேச்சைக் குழு உறுப்பினர் புஹாரி நஸீர் இரகசிய வாக்கெடுப்பு கோரியிருந்தாலும், மாற்று வேட்பாளர் இல்லாததால் சட்டப்படி வாக்கெடுப்பு நடத்த முடியாது என உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








