இந்த ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் வெசாக் பௌர்ணமி தினத்துடன் நிறைவடைவதாக ஸ்ரீபாதஸ்தானாதிபதி வண. பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிவனொளிபாதமலையில் பல விசேட மத வழிபாட்டுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள், அதாவது மே 31 ஆம் திகதி ஸ்தலத்தில் நடைபெறும் விசேட மத வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டுள்ள புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வீக ஆபரணங்கள் என்பன நான்கு வீதிகள் ஊடாக பெல்மடுல்லை கல்போத்தாவல ஸ்ரீபாத ரஜமகா விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதாக பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் சிலை மற்றும் ஆபரணங்கள் என்பன ஸ்ரீபாத யாத்திரையற்ற காலம் நிறைவடையும் வரை அந்த விகாரையிலேயே வைக்கப்பட்டு வழிபடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




