ஓமானுக்கு ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் ஓமான் நாட்டுக்கு விடுத்துள்ள இராணுவ எச்சரிக்கையினைத் தொடர்ந்து, அவர் தனது பதவிக்காலத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு 13 நாடுகளில் ஒரு நாட்டை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை (27) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஈரான் நாட்டுடன் இணைந்து ஹோர்முஸ் நீரிணையை ஓமான் கட்டுப்படுத்த முயன்றால், அதன் மீது இராணுவத் தாக்குதல் நடத்த நேரிடும் என ட்ரம்ப் மிகச் சாதாரணமாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.

“ஓமான் மற்ற எல்லோரையும் போல ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், நாம் அவர்களை தகர்க்கவேண்டியிருக்கும்” என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

தன்னை ஒரு போருக்கு எதிரானவராகத் தேர்தல் பிரச்சாரங்களில் காட்டிக்கொண்ட ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் 16 மாதங்களிலேயே மிக மோசமான மற்றும் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கையைக் கையாண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.