அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் இதற்கான யோசனையை சமர்ப்பித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் முதலாம் தர மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிடப்படும் இந்த சுற்றுநிருபத்தின் முக்கிய நோக்கம், கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதாகும். அத்துடன், மாணவர் சேர்க்கையின் போது வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முறைகேடுகளைக் குறைக்கவும் தேவையான ஏற்பாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இம்முறை புதிய சுற்றுநிருபமானது இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடசாலை அதிபர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரின் கருத்துக்கள், யோசனைகள் மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2027 ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்து வரும் காலங்களில் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.




