யாழ். பருத்தித்துறை வெளிச்ச வீட்டுப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, புனரமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள வெளிச்ச வீட்டுப் பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அதனால் வெளிச்ச வீட்டு பகுதியை மக்கள் பார்வையிடவோ, அவற்றை புகைப்படம், காணொளி எடுப்பதற்கோ இராணுவத்தினர் அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையில், வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அதனை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை (22) அப்பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் வெளிச்ச வீட்டுப் பகுதியை பார்வையிட்டார்.

இதன்போது அவர் கூறுகையில்,

குறித்த பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் முழுமையாக பார்வையிடும் வகையில் தேவையான ஏற்பாடுகளை வெகு விரைவில் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வரலாற்றுச் சின்னம் மீண்டும் சேதமடையாமல் நீண்டகாலம் பேணிப் பாதுகாக்கும் வகையிலான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சியையும் எமது பாரம்பரிய மரபுச்சின்னங்களின் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து செயற்படுவதே எமது நோக்கமாகும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்