ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன!

கோப் குழுவின் அறிக்கைகள் இனி பொலிஸ் மாஅதிபர், சட்ட மாஅதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மக்களின் வரிப்பணத்தில் தான் கோப் குழு செயற்படுகிறது. ஆகவே அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே எவரும் திணற வேண்டியதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கோப் குழு அறிக்கைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கோப் குழுவின் விசாரணை அறிக்கைகள் இதுவரை காலமும் பாராளுமன்றத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்தது. ஏதேனும் முறைகேடுகள் தொடர்பில் கோப் குழுவுக்கு அரச அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள். விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அத்துடன் அதன் நடவடிக்கைகள் முடிவடைந்துவிடும். அதன் பிறகு ஏதும் நடக்காது.

கோப் குழு மக்களின் வரிப்பணத்தில் தான் செயற்படுகிறது. ஆகவே சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

இதற்கமைவாக கோப் குழுவானது தமது விசாரணை அறிக்கைகளை இலஞ்ச ஊழல் திணைக்களம், சட்ட மாஅதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் மாஅதிபருக்கு இனி நேரடியாக அனுப்பி வைக்க முடியும். அதற்கான வகையில் ஒழுங்குவிதிகளை தற்போது திருத்தம் செய்துள்ளோம். கோப் குழுவின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இனி உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டு தற்போது பிணையில் உள்ளவர்கள் சிறை செல்ல நேரிடும் என்பதை முன்கூட்டியதாகவே அறிந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துகொண்டு நீதிமன்ற சுயாதீனத்தை மலினப்படுத்தும் வகையில் பேசுகிறார்கள். இவர்கள் வெளியில் சென்று இவ்வாறு பேசினால் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.