சர்வதேச அளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க பரதநாட்டிய மகா நடன பயிற்சி உலக சாதனை நிகழ்வான “சங்கமம் 2026” இன் அங்குரார்ப்பண ஆரம்ப நிகழ்வை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையின் சங்கமம் லியா ஹொலிடேஸ் மற்றும் இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமி ஆகிய நிறுவனங்கள் இணைந்து, தொன்மையும் பழமையும் வாய்ந்த தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பரதநாட்டிய கலையின் பெருமையும் , பாரம்பரியத்தையும் உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் (Guinness World Records) இடம்பிடிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மகா பரதநாட்டிய நடன நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. இதில் சர்வதேச ரீதியாக 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த 28/04 அன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் கலையரங்கில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய நடன கலைஞர்களின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 500 மேற்பட்ட பரதநாட்டிய ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், இரு நாடுகளினதும் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் இந்தியா ஆசியான் இலங்கை வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் உப தலைவர் உட்பட மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.










