அவசர காலத் தேவைகளுக்காக உணவுப்பொருட்களை சேமித்து வைக்க திட்டங்கள் தீட்டி வருகிறது ஜேர்மனி அரசு.
அவசர காலத் தேவைக்காக…
ஈரான் போர் எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவேண்டும் என்று கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த போர், சம்பந்தமே இல்லாத பல நாடுகளில் உணவுப் பிரச்சினைகளை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில், போரைக் காரணமாக முன்வைக்காவிட்டாலும், அவசர காலத் தேவைகளுக்காக என்று கூறி, உணவுப்பொருட்களை சேமித்துவைக்க ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
அது தொடர்பாக பேசிய ஜேர்மன் வேளாண்மைத்துறை அமைச்சரான Alois Rainer, பல்வேறு இடங்களில் கேன்களில் அடைக்கப்பட்ட உணவு முதலான பல உணவுபொருட்களை சேமித்துவைக்க அரசு திட்டமிட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவசர சூழல் ஏதாவது ஏற்படும் பட்சத்தில், மக்களுக்கு உணவு எளிதாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், அவசர காலத்துக்காக என்றாலும், எல்லா உணவுப்பொருட்களையும் நீண்ட காலத்துக்கு சேமிப்பில் வைக்க முடியாது.
அப்படி வைத்தால் அவை கெட்டுப்போய்விடலாம். ஆகவே, அதற்கென முறைப்படி திட்டமிட்டு, ஆட்களை ஏற்பாடு செய்து, ஒரு உணவுப்பொருள் காலாவதியாகும் முன், அதை விற்பனைக்கு அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக புதிதாக உணவுப்பொருட்களை சேமித்துவைக்கவேண்டும்.
இந்த திட்டத்துக்காக, ஆரம்பத்தில் 30 மில்லியன் யூரோக்களும், பின்னர் ஆண்டுக்கு 70 முதல் 80 மில்லியன் யூரோக்களும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




