மிதிகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (18) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிதிகம யஹுவத்த, கங்கோட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், வீட்டின் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் வீட்டின் வாயிலைத் திறந்து வளாகத்திற்குள் நுழைந்து, வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு தீ வைத்து, பின்னர் சுமார் ஐந்து முறை துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
மிதிகம “லான்சி” என அழைக்கப்படும் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடையவர்களின் செயலாக இது இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், உடற்பயிற்சி நிலையத்தில் குறித்த வீட்டின் உரிமையாளரான 35 வயது வர்த்தகருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில், வர்த்தகர், அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் வயோதிபர் ஒருவர் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





