வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாரபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மன்னார், தாரபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது 06 மாதங்களேயான குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – உடுகம வீதியின் படதூவ பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது விபத்தில் காயமடைந்த பெண் பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் படதூவ, போகஹவத்தை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.