லெபனானில் ஐ.நா அமைதிப்படை மீது தாக்குதல் : ஹிஸ்புல்லா மீது மேக்ரான் குற்றச்சாட்டு

லெபனானின் தெற்குப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதிப்படை (UNIFIL) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மேக்ரான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் சர்வதேச சமூகத்திடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை தெற்கு லெபனானில் சர்வதேச அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுப் படையினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் ஒரு வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பே காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ஜனாதிபதி மேக்ரான் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளிகளை லெபனான் அதிகாரிகள் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் நவாப் சலாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதரவாக இருக்கும் நட்பு நாடுகளுக்கு

“இந்த பொறுப்பற்ற செயல் லெபனானுக்கும், லெபனானுக்கு ஆதரவாக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

லெபனானில் ஐ.நா அமைதிப்படை மீது தாக்குதல் : ஹிஸ்புல்லா மீது மேக்ரான் குற்றச்சாட்டு | Attack On Un Peacekeepers In Lebanon Macron

இது குறித்து உடனடி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், தனது பதிவில் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. லெபனானில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஐ.நா அமைதிப்படை மீதான இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய சிக்கல்களை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.