காணாமலாக்கப்பட்டோர் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும்

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5000 முறைப்பாடுகளையும், அடுத்த ஆண்டு 6000 முறைப்பாடுகளையும் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் மற்றும் பொது விடயங்கள் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். வடக்குக்கு சென்றால் தமிழ் மக்கள் ஜனாதிபதியை அன்புடன் வரவேற்கிறார்கள். கடந்த காலங்களில் இவ்வாறான தன்மை காணப்படவில்லை. ஜனாதிபதியும் மக்களோடு மக்களாகவே செயற்படுகிறார்.

தமிழ் மக்கள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படவில்லை. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறாது என்பதற்கு உறுதியளிக்கிறோம். இனவாத முரண்பாடுகளினால்தான் இந்த நாடு பாரிய பின்னடைவை எதிர்கொண்டது” என்றார்.