நன்னீர் மீன்பிடித் துறை மேம்பாடு: கிராமிய சங்கங்களுடன் விசேட திட்டங்கள்

நன்னீர் மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக நீர்த்தேக்கங்களுக்கு தேவையான மீன் குஞ்சுகளை சேகரிப்பதுடன் சம்பந்தப்பட்ட கிராமிய மீன்பிடி சங்கங்களுடன் இணைந்து விசேட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அஜித் கிஹான் எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நன்னீர் மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொருத்தமான நீர் தேக்கங்களுக்கு அருகில் சீமெந்து தடாகங்கள் அமைக்கப்படும். அத்துடன் மூன்று பாரிய இனப்பெருக்க மையங்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் சாத்தியப்பாடு தொடர்பான ஆய்வுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

அதேவேளை, அலங்கார மீன்கள் வளர்ப்பு கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவதற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

ஏற்றுமதிக்கு பொருத்தமான சிறந்த இன மீன்களை வளர்ப்பதற்கான உதவிகளும் வழங்கப்படுவதுடன் அலங்கார மீன் வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. ரம்பொடகல பயிற்சி மையம் இந்த துறையில் புதிதாக பிரவேசிப்பவர்களுக்கான பயிற்சிகளையும் தற்போது வழங்கி வருகிறது என்றார்.