வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீனர்கள் நாடு கடத்தல்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீன நாட்டினர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விதிகளை மீறி, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட சீன நாட்டினரில் 6 பெண்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதற்காக 11 சீனப் பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

மேலும், இந்தக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு 10.50 மணிக்கு, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU-714 பயணிகள் விமானம் மூலம் சீனாவின் குன்மிங்கிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.